சிங்கப்பூரின் தண்ணீர் விநியோகம், போக்குவரத்து, மற்ற அத்தியாவசியத் துறைகள் ஆகியவற்றை முடக்கிவிடக்கூடிய இணையத் தாக்குதல்களிலிருந்து செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகளைப் பாதுகாக்கும் பெருந்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
திறனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியும், பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தும், இத்தகைய இணையத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பைப் பெருந்திட்டம் வலுப்படுத்தும்.
நான்காவது சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தைச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) தொடங்கி வைத்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், செயற்பாட்டுத் தொழில்நுட்ப இணையப்பாதுகாப்புப் பெருந்திட்டத்தை அறிவித்தார்.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கருவிகளும் கணினிகளும் கொண்ட அத்தியாவசியமான உள்கட்டமைப்புச் சேவைகளை இந்தச் செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகள் இயக்குகின்றன. தண்ணீர், எரிபொருள், போக்குவரத்து, ஊடகம் ஆகிய துறைகள் இதில் உள்ளடங்கும்.
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, இன்றைய உலகம் எதிர்நோக்கும் ஆக முக்கியமான இணைய மிரட்டல்களில் செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகள் மீதான தாக்குதல்களும் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் தொழில்துறை பங்காளிகளும் உருவாக்கிய பெருந்திட்டம், செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகளை வலுப்படுத்த வழிகாட்டும் என்றும் திரு டியோ தெரிவித்தார்.
பெருந்திட்டத்தின்கீழ், குளோபல் ரிசிலியன்ஸ் ஃபெடரேஷன் எனும் மிரட்டல் உளவு மையத்துடன் கூட்டிணைந்து, புதிய செயற்பாட்டுத் தொழில்நுட்ப இணையப்பாதுகாப்பு தகவல் பகிர்வு மற்றும் பகுப்பாய்வு நிலையம் அமைக்கப்படவுள்ளது.