சூதாட்டம் தொடர்பான மீறல்களுக்காக சூதாட்டக்கூட கட்டுப்பாட்டு ஆணையம் சென்ற ஆண்டு மொத்தம் $746,700 அபராதம் விதித்தது. இதில் பெரும்பகுதி செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் உல்லாசத்தளத்திற்கு விதிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான நிதி ஆண்டில் விதிக்கப்பட்ட அபராதமே கடந்த ஐந்து ஆண்டுகளில் விதிக்கப்பட்டதில் ஆக அதிகமானது.
இதற்கு முந்திய நிதி ஆண்டில் வசூலிக்கப்பட்ட $74,400 அபராதத்தைவிட சென்ற ஆண்டின் அபராதம் பத்து மடங்கு அதிகம் என ஆணையத்தின் அண்மைய ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
சென்ற மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, செந்தோசா உல்லாசத்தளத்திற்கு $730,000 அபராதமும் மரினா பே சாண்ட்ஸ் உல்லாசத்தளத்திற்கு $15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு விதிமுறைகளின் மீறல்களுக்காகவும், ஆணையம் வகுத்த கட்டுப்பாடுகளை அல்லது உத்தரவுகளை அமலாக்கத் தவறியதற்காகவுமே இந்த அபராதங்களில் பெரும்பகுதி விதிக்கப்பட்டது.
மீதி $1,700 அபராதம், சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றமிழைத்த தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாகச் சூதாட்டக் கூடத்தில் இருந்தவர்கள் அல்லது நுழைவுத் தீர்வை செலுத்தத் தவறியவர்கள்.
ஜென்டிங் சிங்கப்பூர் நிறுவனம் நடத்தும் செந்தோசா உல்லாசத்தளம், 21 வயதுக்குக் குறைவான ஐவரைச் சூதாட்டக் கூடத்திற்குள் நுழைய அல்லது இருக்க அனுமதித்ததாகத் தெரிய வருகிறது. இந்த மீறல்கள் ஒவ்வொன்றுக்கும் $80,000 அபராதம் விதிக்கப்பட்டது.
லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் மரினா பே உல்லாசத்தளம், 21 வயதுக்குக் குறைவான ஒருவரைச் சூதாட்டக் கூடத்திற்குள் அனுமதித்ததற்காக $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. நுழைவு அனுமதி இல்லாத சிங்கப்பூர் நிரந்தரவாசியை உள்ளே விட்டதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குறைந்த வயதுடையவர்கள் சூதாட்டக்கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டதற்குச் சூதாட்டக்கூட ஊழியர்களின் கவனக்குறைவே காரணம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் ஆணையம் தெரிவித்தது.