வரி செலுத்தாத சிகரெட்டுகளை ரொட்டித் துண்டுகளுக்கிடையே வைத்து சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று பிடிபட்டார்.
மொத்தம் 32 சிகரெட் பாக்கெட்டுகளை நான்கு ரொட்டி பொட்டலங்களின் இடையே பதுக்கி வைத்திருந்த 52 வயது ஆடவர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வருகைக் கூடத்தில் சந்தேகப்படும் வகையில் நடந்துகொண்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) கூறியது.
அதிகாரிகள் அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டதில் சிகரெட் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் சுங்கச்சாவடி விசாரணை மேற்கொள்ளும் என்று ‘ஐசிஏ’ தெரிவித்தது.
இவ்வாறு வரி செலுத்தாத சிகரெட்டுகளை உணவுப் பொருட்களுக்குள் வைத்துக் கடத்தும் முயற்சிகள் கவலை அளிக்கின்றன என்றும் நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் அளிக்கும் வகையில் சில பேர்வழிகள் இதே முறையைப் பயன்படுத்தலாம் என்றும் ஆணையம் கூறியது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity