சிங்கப்பூர் கடைகளில் சுவாசக் கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகப் பலரும் கூறிவரும் வேளையில், அதிகாரிகள் பலர் வற்புறுத்தியும், ஒரு பெண் சுவாசக் கவசம் அணிய மறுத்து அடம்பிடித்த சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
வூஹான் கொரோனோ வைரஸ் கிருமித் தொற்றால் 130க்கு மேற்பட்டோர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். 6,000க்கு மேற்பட்டோர் அங்கு அந்தக் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சுவாசக் கவசம் அணிவதை அங்குள்ள அதிகாரிகள் உறுதி செய்வதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று.
மத்திய சீனாவின் ஹேனான் மாகாணத்தில் உள்ள பிங்டிங்ஷான் நகரில் நேற்று முன்தினம் (ஜனவரி 27) பேருந்தில் அமர்ந்திருந்த வயதான பெண் ஒருவர் சுவாசக் கவசம் அணியவில்லை.
அதனைக் கண்ட அதிகாரிகள் அவரை அணுகி சுவாசக் கவசம் அணியுமாறு கோரினர். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தார். வீட்டுக்குத் திரும்பியபின் வீட்டில் இருக்கும் சுவாசக் கவசத்தை அணிந்துகொள்ளப் போவதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆனால், அந்தப் பெண்ணிடம் சுவாசக் கவசம் ஒன்றை நீட்டிய அதிகாரிகள் அதனை அணிந்துகொள்ளும்படி வற்புறுத்தினர். அந்தப் பெண் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
அவர் சுவாசக் கவசம் அணிந்தால்தான் பேருந்து அவ்விடத்திலிருந்து நகரும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டபோதும் அந்தப் பெண் சிறிதும் அசரவில்லை.
அந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்குத் தாம் கட்டணம் செலுத்தியிருப்பதாகச் சொன்னார் அந்தப் பெண்.
சுவாசக் கவசம் அணிய மறுத்தால் பேருந்தில் இருந்து இறங்குமாறும் கூறிய அதிகாரிகள் அந்தப் பெண் செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறினர்.
ஆனால், அந்தப் பெண்ணோ சுவாசக் கவசத்தையும் அணியவில்லை; பேருந்தை விட்டும் இறங்கவில்லை.
வேறு வழியின்றி, அந்தப் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் வாகனத்திலிருந்து இறங்கினர். பின்னர் அந்தப் பெண்ணும் அந்தப் பேருந்திலிருந்து இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
#சுவாசக்கவசம் #சீனாமூதாட்டி