ஜப்பானிய கரையோரப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் மேலும் மூவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து, அந்தக் கப்பலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
‘டைமண்ட் பிரின்சஸ்’ எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல், கடந்த திங்கட்கிழமையிலிருந்து ஜப்பானியக் கரைக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
அதில் 3,700க்கும் மேற்பட்ட பயணிகளும் ஊழியர்களும் உள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 280 பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலிலிருந்து கடந்த மாதம் ஹாங்காங்கில் இறங்கிய முன்னாள் பயணி ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இருந்தவர்களைத் தவிர்த்து, ஜப்பானில் குறைந்தது 25 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #கொரோனா #ஜப்பான் #சொகுசுக்கப்பல்