சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் உட்பட மேலும் மூவருக்கு கிருமித்தொற்று; எண்ணிக்கை 75 ஆனது
சிங்கப்பூரில் 'கொவிட்-19' எனப்படும் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் மூவர் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 16) சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் 'கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்' சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். மற்றொருவர், ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர். இந்த மூவரும் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை.
43 வயதான அந்த வீரர் தெங்கா ஆகாயப்படைத் தளத்தில் பில்டிங் 613ல் பணிபுரிவதாகச் சொல்லப்பட்டது. அவர் இம்மாதம் 6ஆம் தேதிக்குப் பிறகு பணிக்குச் செல்லவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் சென்று வந்த பகுதிகள் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இம்மாதம் 9ஆம் தேதி கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அதற்கு அடுத்த நாள் அவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 13ஆம் தேதி அவருக்கு தடைகாப்பு ஆணை வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அவர் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 73வது நபரான அவர், தோ பாயோவில் வசிக்கிறார்.
கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 74வது நபர் 29 வயதான சிங்கப்பூர் ஆடவர். கடந்த புதன்கிழமை கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டார்.
உபி ரோட்டில் இருக்கும் ஹை-இயோ டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் மெய் லிங் ஸ்திரீட்டில் வசிக்கிறார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 75வது நபர் 71 வயதான சிங்கப்பூர் மாது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 41வது நபரின் குடும்ப உறுப்பினர் இவர். இன்று அவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அவர் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்.
மேலும் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டது. இவருடன் சேர்த்து, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆனது.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் 56 பேரில் ஐவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்' தேவாலயத்தின் தொடர்பில் இதுவரை 18 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேவாலயத்தின் இரு வளாகங்களும் சுமார் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
#தமிழ்முரசு #கொரோனா