வூஹான் மருத்துவர் கொரோனா கிருமித்தொற்றால் மரணம்
வூஹான் மருத்துவமனையில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 29 வயது மருத்துவர் பெங் யின்ஹுவா அதே கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார் என்று உள்ளூர் சுகாதார அறிக்கை தெரிவித்தது.
அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் டாக்டர் பெங், நேற்று (பிப்ரவரி 20) இரவு 9.50 மணிக்கு மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (பிப்ரவரி 20 நிலவரப்படி) 62,662 என்று கூறப்பட்டது.
சீனாவின் இரண்டு சிறைகளில் 200க்கு அதிகமானோருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 631 ஆனது.
அந்த வட்டாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (பிப்ரவரி 20 நிலவரப்படி) 2,144ஐத் தொட்டது. நேற்று ஒரே நாளில் 115 எண்ணிக்கை கூடியது குறிப்பிடத்தக்கது. சீனா முழுவதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (பிப்ரவரி 20 நிலவரப்படி) 2,236 என்று கூறப்பட்டது.
#வூஹான் #மருத்துவர் #கொரோனா #தமிழ்முரசு