வெவ்வேறு இணைய வர்த்தக மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 20) கைது செய்யப்பட்டனர்.
முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க இணையம்வழி கட்டணம் செலுத்தியவர்கள் இந்த மோசடி சம்பவங்களில் ஏமாற்றம் அடைந்தனர்.
‘கொவிட்-19’ கிருமித்தொற்றை எதிர்கொள்ள மேற்கூறப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள வேளையில், மோசடி சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன.
கடந்த மாதம் 2ஆம் தேதிக்கும் இம்மாதம் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இணையத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்வதாகக் கூறி மோசடிக்காரர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் புகார் அளித்துள்ளதை போலிஸ் இன்று (22 பிப்ரவரி) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டியது.
பொருளை வாங்குவதற்காக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு வாடிக்கையாளர்கள் பணத்தை மாற்றிவிட்ட பிறகு, விற்பனையாளர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதாக போலிஸ் குறிப்பிட்டது.
இந்த மோசடி தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 250க்கும் அதிகமான இணைய வர்த்தக மோசடிகள் புரிந்ததன் சந்தேகத்தின் பேரில் இரு ஆடவர்கள், ஒரு மாது, ஒரு பதின்ம வயது சிறுவன் ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.
இந்த மோசடிச் சம்பவங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், கேரொசல், ஃபேஸ்புக் மார்கெட்பிளேஸ், கம்ட்ரீ உள்ளிட்ட மின் வர்த்தக தளங்களில் புரியப்பட்டன.
மோசடி புரிந்ததாக மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 15 வயது சிறுவன் மீது நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் மேற்கூறப்பட்ட இதே குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
#இணையமோசடி #கொவிட்-19 #சிங்கப்பூர்