சிங்கப்பூரில் கொரோனா கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 879ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேர் உட்பட புதிதாக 35 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று சுகாதார அமைச்சு இன்று (மார்ச் 30) தெரிவித்தது.
கிருமிப் பரவும் இடங்களாக மூன்று புதிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எண் 2 சிலேத்தார் நார்த் லிங்கில் உள்ள எஸ்11 டார்மிட்டரி@பொங்கோல், எண் 25 வில்பி ரோட்டில் உள்ள வில்பி ரெசிடன்சஸ், எண் 69 செர்க்யுளர் ரோட்டில் உள்ள ஹீரோஸ் இரவு விடுதி ஆகியவை அந்த மூன்று இடங்கள்.
உள்ளூரில் கிருமி தொற்றியோரில் இந்திய ஆடவர்கள் மூவர் அடங்குவர். உள்ளூரில் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 26 பேரில் 12 பேர், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். 14 பேருக்கு எதனுடனும் தற்போது தொடர்பில்லை.
கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு 16 பேர் இன்று வீடு திரும்பினர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 228 பேர் குணமடைந்துள்ளனர். கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை மூவர் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனையில் உள்ள 420 பேரில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தற்போது நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 228 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.