சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளது.
அவர்களில் அறுவருக்கு, பிப்ரவரி 15ஆம் தேதி சாஃப்ரா ஜூரோங்கில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தில் நடைபெற்ற இரவு உணவு விருந்துடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 36 பேர், கிருமிப் பரவல் இடமாக கண்டறியப்பட்டுள்ள சாஃப்ரா ஜூரோங்கில் நடைபெற்ற இரவு உணவு விருந்துடன் தொடர்புடையவர்கள்.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் எஞ்சிய நான்கு சம்பவங்களில் ஒன்று, ‘லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்கப்பூர்’ தேவாலயத்துடன் தொடர்புடையது.
மீதமுள்ள மூவர், வெளிநாடுகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இங்கு வந்தவர்கள்.
புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 10 பேரையும் சேர்த்து, சிங்கப்பூரில் பதிவாகியுள்ள மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ள மேலும் மூவர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 93ஆக உள்ளது.
மருத்துவமனையில் எஞ்சியுள்ள 67 நோயாளிகளில் 10 பேர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். எஞ்சியவர்களின் உடல்நிலை சீராக உள்ளது, அல்லது மேம்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கிருமித்தொற்றுக்கு ஆளான சுற்றுப்பயணிகள் மற்றும் குறுகியகால வருகை அட்டை உடையோர், கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) முதல் சிங்கப்பூரில் பெறும் சிகிச்சைக்கான முழு செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், இங்குள்ள மருத்துவமனைகளில் வளங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
எனினும், இத்தகைய பிரிவினருக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணத்தை சிங்கப்பூர் தொடர்ந்து தள்ளுபடி செய்யும் என்று அவர் கூறினார்.
“ஆனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டும்,” என்று அப்பேச்சாளர் விவரித்தார்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அட்டை வைத்திருப்போர் இங்குள்ள பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசாங்கம் தொடர்ந்து ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.