மலேசியாவின் கிருமிப்பரவல் கட்டுக்குள் இருக்கும் ‘பச்சை பகுதிகளில்’ உள்ள இந்து ஆலயங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்காகத் திறந்துவிடப்பட உள்ளது.
ஜூன் மாதம் 10ஆம் தேதியிலிருந்து இந்த நடைமுறை நடப்புக்கு வரும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் கூறினார்.
ஆலயங்கள் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டாலும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை கோயில்களில் திருமணம் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
“ஒருங்கிணைப்பு அமைச்சு (Unity Ministry) வகுத்துள்ள கடுமையான நடைமுறைகள் நடப்பில் இருக்கும். ஆலய நிர்வாகக் குழுக்களுடன் ஆலோசித்த பிறகு, கோயில்களைத் திறப்பதற்கான இந்த நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்ட அவர், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் கோயிலை பக்தர்களுக்காகத் திறக்க அளித்த அனுமதி மீட்டுக்கொள்ளப்படும் என்றார்.
‘பச்சை பகுதிகளில்’ உள்ள முஸ்லிம் சமயம் அல்லாத மற்ற சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படும் என கடந்த 21ஆம் தேதி அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
கோயிலில் ஒரே நேரத்தில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; ஆலயத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடும். 12 வயதுக்குட்பட்டவர்களும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.
மேற்கூறிய கட்டுப்பாடுகள் தவிர, முக்கியமான நாட்களில் மட்டுமே ஆலயங்கள் திறக்கப்படும் என்றும் மலேசியர்கள் மட்டுமே ஆலயங்களுக்குச் செல்ல முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உள்ளன.
நாடு முழுவதும் 174 ஆலயங்களைத் திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அவற்றில் 84 இந்து ஆலயங்கள், 15 சீனக் கோயில்கள், 67 கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் எட்டு சீக்கிய குருத்துவாராக்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online