நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள பேரங்காடி ஒன்றில் இன்று (செப்டம்பர் 3) குறைந்தது ஆறு பேரைக் கத்தியால் குத்திய நபரைப் போலிசார் சுட்டுக்கொன்றனர். அவர்களில் மூன்று பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் இலங்கை நாட்டவர் என்றும் அவரை நியூசிலாந்து போலிசார் ஐந்து ஆண்டுகளாகக் கண்காணித்து வந்தனர் என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், ஐஎஸ் பயங்கரவாதக் குழுவைப் பார்த்து தூண்டப்பட்டதாகவும் தாக்குதல் தொடங்கிய 60 வினாடிகளுக்குள் போலிசார் அவரை சுட்டுக்கொன்றதாகவும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
ஆக்லாந்தில் நியூலின் வட்டாரத்தில் உள்ள கவுண்ட்டவுன் எனும் பேரங்காடியில் பிற்பகலில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
பேரங்காடிக்குச் சென்ற அந்நபர் அங்கு அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, அருகில் இருந்தவர்களைக் குத்தத் தொடங்கினார் என்று நியூசிலாந்து ஊடகங்கள் கூறின.
அவர் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து போலிசார் அவரைத் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர் என்றும் தாக்குதல் நடந்த நேரத்தில் அவர்கள் அருகே இருந்தனர் என்றும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
அந்தத் தாக்குதலை வெறுக்கத்தக்க செயல் என்று வருணித்த திருவாட்டி ஆர்டன், அதைத் தனிநபர் நடத்தியதாகவும் எந்த சமயமும் நடத்தவில்லை என்றும் கூறினார். அச்செயல்களுக்கு அந்த நபர் மட்டுமே பொறுப்பு என்றார் அவர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கத்திக்குத்துக் காயங்களுடன் பலர் தரையில் கிடந்ததைப் பார்த்ததாகக் கூறினர்.
தாக்குதல் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட காணொளிகள், அங்கு பெரும் குழப்பம் நிலவியதையும் தாக்குதல் தொடங்கியபோது பேரங்காடிக் கடையிலிருந்து பலர் தப்பி ஓடியதையும் காட்டின. பின்னர் சற்று நேரத்தில் துப்பாக்கிச்சூடு சத்தம் ஆறுமுறை கேட்டது.
தாக்குதலை நடத்திய நபர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றார் என்றும் 2016ஆம் ஆண்டிலிருந்து அவர் பின்பற்றிய சித்தாந்தத்தால் அவரை போலிசார் நோட்டமிட்டு வந்தனர் என்றும் அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அவரை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர் என்றும் அவர் பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தடுத்து வைக்கும் அளவுக்கு அவர் எந்தக் குற்றத்தையும் புரியவில்லை என்று திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார்.