நோய்த்தொற்றுச் சூழலுக்கு இடையே டாக்சி, தனியார் வாடகைக் கார்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆறு பயணிகளில் ஒருவர் இதுபோன்ற தனியார் கார்களையே நாடுகின்றனர் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
ஆயினும் இச்சேவைகளைக் குறித்த வாடிக்கையாளர் மனநிறைவு சற்று குறைந்துள்ளது என ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் எக்சலன்ஸ்’ (ஐஎஸ்இ) நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழத்தின் ‘ஐஎஸ்இ’, 2,350 குடியிருப்பாளர்களிடையே ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை இணையம் வழி இக்கருத்தாய்வை மேற்கொண்டது.
61.1 விழுக்காட்டினர் கொள்ளைநோயால் தாங்கள் பயணம் மேற்கொள்ளும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் எம்ஆர்டிகளில் பயணம் செய்வதைக் குறைத்துக்கொண்டுள்ளனர். 18.3 விழுக்காட்டினர் பொதுப்பேருந்தில் பயணம் செல்வதைக் குறைத்துக்கொண்டுள்ளனர்.
15.7 விழுக்காட்டினர் டாக்சிகளிலும் தனியார் வாடகைக் கார்களிலும் பயணம் செய்வதாகக் கூறிஉள்ளனர்.
டாக்சிகளிலும் தனியார் கார்களிலும் பயணம் செல்வது நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்கும் என பலர் எண்ணுவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ‘ஐஎஸ்இ’யின் நிர்வாக இயக்குநரான நீத்தா லட்சுமனணதாஸ் கூறியிள்ளார்.
பயணிகள் வாடகைக்கார்களை நாடும் போக்கு அதிகரித்திருந்தாலும், பயண முறை குறித்த வாடிக்கையாளர் மனநிறைவு 3.6% குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
தேவைப்படும்போது சேவைகளைப் பெறமுடியாதது, விதிக்கப்படும் கட்டணங்கள், கட்டணத் தள்ளுபடி, கழிவு இன்மை ஆகியவை சேவை குறித்த அதிருப்திக்கு மூன்று முக்கியக் காரணங்களாகப் பல்கலைக்கழகம் சுட்டியது.
மேலும் எம்ஆர்டி, பொதுப்பேருந்து பயணிகள் மனநிறைவு விகிதம் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதே அளவில் இருப்பதையே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
“நோய்த்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 60 விழுக்காட்டினரே தொடர்ந்து பொதுப்போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதாக செப்டம்பர் 20ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.