பாய லேபார் வட்டாரத்தில் தனியார் குடியிருப்புப் பகுதி ஒன்றில், இம்மாதம் 22ஆம் தேதி தமது காரின் முன்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டதை அறிந்த அந்த காரின் உரிமையாளர், சிரமம் கருதி முதலில் போலிசிடம் புகார் அளிக்கவில்லை.
ஆனால், இதேபோன்ற வேறொரு சம்பவம் நடந்தது பற்றி தமக்குத் தெரிந்தவுடன் போலிசிடம் அவர் புகார் அளித்திருக்கிறார்.
தரைவீடுகள் உள்ள அந்த வட்டாரத்தில் இதுவரை இரண்டு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இம்மாதம் 27ஆம் தேதி பின்னிரவில் அந்தப் பகுதியில் வேறொரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் அச்சம்பவம், காரில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவானதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
அது பற்றி படித்தவுடன், தமது காருக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது பற்றி போலிசிடம் புகார் அளிக்க தாம் முடிவெடுத்ததாக இம்மாதம் 22ஆம் தேதி சேதப்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் தெரிவித்தார்.
கார் கண்ணாடியைப் பழுதுபார்த்தால் போதும் என்று தாம் முதலில் நினைத்ததாக அந்த 44 வயது கார் உரிமையாளர் கூறினார்.
ஆனால் ஒரு வாரத்துக்குப் பின்னர் மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதால், கார்களைச் சேதப்படுத்திய நபர் இன்னமும் அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருக்கலாம் என்று அவர் சொன்னார்.
கார்கள் நிறுத்தப்பட்டிருந்த வரிசையில் தமது கார் மட்டும் சேதப்படுத்தப்பட்டது என்று காரில் ஏதும் திருட்டுப் போகவில்லை என்றும் அவர் சொன்னார்.