தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடுவது பற்றி மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அத்தகைய பயணிகள் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் முகைதீன் யாசின் இதனை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையே தடுப்பூசிச் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படுவதன் பொருட்டு இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
“முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட மின்னிலக்கத் தடுப்பூசிச் சான்றிதழ் உடையோருக்கு எல்லைகள் திறந்துவிடப்படலாம்.
“புறப்பாட்டிற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் தேவைப்படலாம். ஆனால், மலேசியா வந்திறங்கியதும் பயணிகள் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவது அல்லது அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய காலத்தைச் சுருக்குவது பற்றி நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
“இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்,” என்றார் திரு முகைதீன்.