மலேசிய அமைச்சர் எச்சரிக்கை: தடுப்பூசி போடாதவர்களுக்கு வாழ்க்கை சிரமமாகும்
தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களின் வாழ்க்கையை சிரமமாக்குவோம் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் எச்சரித்துள்ளார்.
“தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று நீங்கள் எடுத்த முடிவால் சிரமமான வாழ்ககையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தகுதியான மருத்துவச் சான்றிதழ் வைத்துள்ள தடுப்பூசி போடாதவர்களுக்கு இது பொருந்தாது என்றார் அவர்.
“உங்களுக்குத் தடுப்பூசி போடக்கூடாது என்றால் மைசெஜாத்ரா செயலி வழி விலக்கு அளிப்போம். ஆனால் தடுப்பூசி போட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் உங்களுடைய வாழ்க்கை சிரமமாகும்.
“நீங்கள் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட முடியாது, கடைத்தொகுதிகளுக்குள் நுழைய அனுமதியிருக்காது,” என்று அமைச்சர் கைரி விளக்கினார்.
தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுமா என்று கேட்டதற்கு, அடுத்த வாரம் தேசிய சோதனை உத்திகள் வெளியிடப்படும்போது, தடுப்பூசி போடாதவர்கள் சொந்தச் செலவில் வாரந்தோறும் கட்டாயம் சோதனைக்குச் செல்வது குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும் என்று அமைச்சர் சொன்னார்.