கோலாலம்பூர்: மலேசியாவின் பல மாநிலங்களில் காய்கறிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மோசமான பருவநிலையால் காய்கறித் தோட்டங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். காய்கறிகளின் தட்டுப்பாட்டால் அவற்றின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.
காலிஃப்ளவர் வழக்கமாக ஒரு கிலோ ஏழு ரிங்கிட்டிற்கு விற்கப்படும். இப்போது அது கிலோ 16 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ 3 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்ட கீரை வகைகள் இப்போது 9 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகின்றன.
காய்கறிகளின் வரத்து குறையும்போதும் அவற்றின் விலைகள் அதிகரிக்கின்றன. தடையற்ற விநியோகத்தைப் பொறுத்தே காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் கேமரன் ஹைலேண்ட்ஸ் போன்ற பகுதிகளில் காய்கறிகளின் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காலங்களில் தாய்லாந்தில் இருந்து காய்கறிகள் தருவிக்கப்படுவதும் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்த விலையேற்றம் சீனப் பெருநாள் விடுமுறை நாட்கள் கழியும் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கேமரன் ஹைலேண்ட்ஸ் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படும் மற்ற பகுதிகளிலும் பெய்துவரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதே காய்கறிப் பற்றாக்குறைக்குக் காரணம் என்று கோலாலம்பூர் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வோங் கெங் ஃபாட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனிதவளப் பற்றாக்குறையையும் வேளாண் துறை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.