கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு 17 பேருக்கு ‘ஓமிக்ரான்’ தொற்று எனச் சந்தேகம்
ஓஸ்லோ: கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் குறைந்தது 17 பேருக்கு ‘ஓமிக்ரான்’ வகை கொரோனா கிருமி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களில் கூடுதலானவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களது பரிசோதனை மாதிரிகளில் மரபணுப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘ஓமிக்ரான்’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
“பிசிஆர் பரிசோதனைகளில் இதுவரை 60 பேருக்கும் ஆன்டிஜன் பரிசோதனைகளில் நால்வருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது,” என்று ஓஸ்லோ நகர அதிகாரிகள் இன்று (டிசம்பர் 3) தெரிவித்தனர்.