சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பான விமானப் பயண வளையத்தை (Air Travel Bubble) தொடங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் நேரடி விமானச் சேவைகள் தொடங்கும்.
தற்போது, சவூதிக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணம் செய்வோர், வளைகுடா நாடுகள் வழியாகவே பயணம் செய்ய முடிகிறது.
இதன் தொடர்பில், சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம், டிசம்பர் 24ஆம் தேதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.
“இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே ஜனவரி 1, 2022 முதல் விமானப் பயண வளைய ஏற்பாட்டைத் தொடங்குவதைத் தூதரகம் பெருமிதத்துடன் அறிவிக்கிறது,” என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.
சவூதியில் வேலை செய்யும் இந்தியர்களுக்கும் அங்கு உம்ரா யாத்திரை செல்லவிருப்போருக்கும் இந்த அறிவிப்பு நற்செய்தியாக அமைகிறது.
இப்போது சவூதி அரேபியாவையும் சேர்த்து, சிங்கப்பூர் உட்பட 34 நாடுகளுடன் இந்தியா பயண ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.