பொங்கல் பண்டிகையின் முதல் திருவிழாவாக போகிப் பண்டிகை நாளை மறுநாள் (ஜனவரி 13) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையின் மீனம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழைய பொருள்களைத் தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 2018ஆம் ஆண்டில் போகிப் பண்டிகையின்போது ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஓடுதளம் தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்தது. இதனால், 118 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமடைந்ததில் நூற்றுக்கணக்கான விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
எனினும் 2019, 2020 & 2021ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, போகிப் பண்டிகையால் ஏற்படும் புகைமூட்டப் பாதிப்பு குறைந்திருக்கிறது.
மேலும், போகிப் பண்டிகையின்போது விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பதைக் குறைத்தனர்.
இதுபோன்று பழைய பொருள்களை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம், விமான நிலைய ஓடுதளத்தின் செயல்பாட்டைப் பாதிப்பதோடு பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், பழைய பொருள்களை எரிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.