தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகள் (விடிஎல்) மூலம் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24) முதல் சிங்கப்பூருக்கு வருவோர், நாள்தோறும் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைகளை (ஏஆர்டி) செய்துகொள்ளத் தேவையில்லை. அவர்கள் வெளியே செல்வதற்குமுன் சொந்தமாக ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்துகொண்டால் போதும்.
மேலும், பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தங்களது கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் இணைப்பு வழியாக தங்களுடைய ‘ஏஆர்டி’ பரிசோதனை முடிவுகளை அனுப்பவும் இனி தேவையிராது. தங்களது வசிப்பிடத்தைவிட்டு வெளியே செல்வதற்குமுன், ‘ஏஆர்டி’ பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ என உறுதி செய்தால் போதும்.
மேலும், பயணிகள் இங்கு வந்திறங்கிய மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில் பயிற்சிபெற்ற ஊழியரின் மேற்பார்வையின்கீழ் ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்துகொள்ள பரிசோதனை மையங்களுக்குச் செல்லவும் தேவையிராது.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.
இதன்மூலம், ‘விடிஎல்’ பயணிகளுக்காக கடந்த டிசம்பர் 6ஆம் தேதிமுதல் நடப்பில் இருந்துவரும் அன்றாடப் பரிசோதனை முறை ஒரு முடிவுக்கு வருகிறது. இந்தப் பரிசோதனை முறைமூலம் இதுநாள் வரை 700க்கும் மேற்பட்டோரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருவோரைவிட, சமூக அளவிலேயே கூடுதலானோருக்குத் தற்போது ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், ‘விடிஎல்’ பரிசோதனை முறையை எளிமையாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக பணிக்குழு விளக்கியது. மக்கள்தொகையில் கூடுதலானோர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளதும் ஓமிக்ரான் தொற்றியோரிடையே பொதுவாக ரத்தத்தில் கிருமி அளவு குறைவாக இருப்பதும் அதற்குக் காரணங்கள்.
சாங்கி விமான நிலையத்திற்கு பயணிகள் வந்திறங்கியவுடன் ‘பிசிஆர்’ பரிசோதனை செய்துகொள்வது தொடர்ந்து கட்டாயமாக்கப்படும். கடற்பாலம் வழியாக ஜோகூரில் இருந்து சிங்கப்பூர் வந்தவுடன் ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையும் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.