லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள இரண்டு மருந்தகங்களின் தலைமை நிர்வாகி சட்டவிரோதமாக 813.2 லிட்டர் இருமல் மருந்தையும் 4,199 தூக்க மாத்திரைகளையும் விநியோகித்தார்.
போதைப் பித்தர்களுக்கு இவை மறுவிற்பனை செய்யப்படும் என்று தெரிந்தே அவர் இந்தக் குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சான் வெங் வா எனப்படும் அவர் வீராசாமி ரோட்டில் உள்ள ஹெல்த்லிங்க் மெடிக்கல் மற்றும் ஹெல்த்குரூப் மெடிக்கல் ஆகிய மருந்தகத்தைச் சேர்ந்தவர்.
2018 ஜூலை மாதத்திற்கும் 2019 டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தக் குற்றங்களை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத விநியோகம் மூலம் அவர் குறைந்தபட்சம் $83,959 லாபம் ஈட்டினார். சிங்கப்பூரரான இவர் மருத்துவர் இல்லை என்பதால் மருந்துகளை இவர் கொடுக்கக்கூடாது.
தற்போது 44 வயதாகும் சான், சுகாதாரப் பொருள்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 19 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இன்று நீதிமன்றத்தில் 48 வார சிறைத் தண்டனையும் $20,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
இதேபோன்ற இதர 38 குற்றச்சாட்டுகள் தண்டனை விதித்தபோது கவனத்தில் கொள்ளப்பட்டன. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று வாரங்களை அவர் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
தண்டனை விதிப்பதற்கு முன்னர் பேசிய நீதிபதி மர்வின் பே, “தூக்க மாத்திரைகளை விநியோகித்த சானின் செயல்கள் கடுமையானவை.
“டோர்மிகம் எனப்படும் அந்த மாத்திரைகள் உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை,” என்றார்.
ஹெல்த் லிங்க் மெடிக்கல் என்னும் மருந்தகத்தின் இயக்குநராக இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆனதாக கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் மற்றொரு மருந்தகமான ஹெல்த்குரூப் மெடிக்கல் பங்கு தாரர் என்பதில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் விலகியதாகவும் அவை குறிப்பிட்டன.