காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள சீக்கிய கோயில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அங்கு வாழும் இந்து மற்றும் சீக்கியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இ-விசா வழங்க முன்வந்துள்ளது.
சனிக்கிழமையன்று (18 ஜூன்) சீக்கிய கோயிலில் 30 பேர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு பேர் மாண்டனர். ஏழு பேர் காயம் அடைந்தனர்.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு கிட்டத்தட்ட 100 இ-விசாக்களை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் 100 இ-விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, சனிக்கிழமை நடந்த குருத்வாரா தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
இந்தியாவில் முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் உயிர் தப்பிய சீக்கியர்கள், தாக்குதலைத் தடுத்து நிறுத்திய தலிபான்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
அதே வேளையில் இங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் கூறினர்.
ஒரு காலத்தில் பல்லாயிரக் கணக்கான சீக்கியர்கள், இந்துக்களின் தாயகமாக ஆப்கானிஸ்தான் இருந்தது.