வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வீட்டை இழக்கும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மீன் வியாபாரி ஒருவருக்கு பரிசுச்சீட்டு (லாட்டரி) மூலம் ரூ.70 லட்சம் கிடைத்தது.
இந்தியாவின் கேரள மாநிலம், கொள்ளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பூக்குஞ்சு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.7.45 லட்சம் கடன் பெற்றார்.
ஆனால், திட்டமிட்டபடி அந்தக் கடன் தொகையை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால் வட்டியும் அசலுமாக அவரது கடன் தொகை ரூ.12 லட்சமாக உயர்ந்துவிட்டது.
இதையடுத்து அந்த வங்கி மேற்கொண்ட சட்டபூர்வ நடவடிக்கை காரணமாக, அவரது வீட்டைப் பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் பூக்குஞ்சு மனம் கலங்கி நின்றார். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் திடீர் திருப்பம் நிகழ்ந்தது. கேரள அரசு நடத்திய பரிசுச்சீட்டுக் குலுக்கலின் மூலம் பூக்குஞ்சுவுக்கு ரூ.70 லட்சம் கிடைத்த தகவல் வந்து சேர்ந்தது.
இதையடுத்து, கைவிட்டுப்போன தன் வீட்டை அவர் மீட்க வழிபிறந்துள்ளது.
எப்போதாவது பரிசுச்சீட்டு வாங்கும் தமக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் இனி தமது பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார் பூக்குஞ்சு.