கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்ததைப் போலவே, பேங்காக், தோக்கியோ, பாலி ஆகியவை சிங்கப்பூர் பயணிகள் ஆண்டிறுதியில் அதிகம் செல்லும் இடங்களாகதத் திகழ்கின்றன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரும் தென்கொரியத் தலைநகர் சோலும் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் மற்ற இரு நகரங்கள்.
பயண முன்பதிவுத் தளமான ‘எக்ஸ்பீடியா’ வெளியிட்டுள்ள தங்குமிடத் தேடல் தரவுகளின் அடிப்படையில், 2022 டிசம்பரில் இருந்து 2023 பிப்ரவரி வரையிலும் சிங்கப்பூர் பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள் இவை.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, குறிப்பாக சீனப் புத்தாண்டுக் காலத்தில் கிழக்கு ஆசியாவிற்கும் அதிகமானோர் செல்வர் என்று எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழியாக தென்கொரியா, தைவான், ஜப்பான், ஹாங்காங் ஆகிய கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் விகிதம் கிட்டத்தட்ட கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலையை நெருங்கியுள்ளது.
அப்பகுதிகளுக்கான விமானங்களில் 2019 நவம்பரில் 88% இருக்கைகள் நிரம்பிய நிலையில், இவ்வாண்டு நவம்பரில் அவ்விகிதம் 81 விழுக்காடாக இருந்தது.
ஜப்பானில், குறிப்பாக அதன் தலைநகர் தோக்கியோவில் தங்குமிடக் கட்டணங்கள் கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்ததைவிட அதிகமாக இருப்பதாக அண்மையில் அந்நாட்டிற்குத் தேனிலவு சென்று இருந்த புதுமணத் தம்பதியர் 33 வயது டான் டிங் வெய்யும் 32 வயது ரோண்டா லிம்மும் கூறினர்.
இரண்டு அல்லது மூன்று நட்சத்திர விடுதிகளின் சாதாரண அறைகளில் ஓரிரவு தங்க $500 செலவாகலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.