தொகுதி எல்லைகளை வரையறுக்கும் குழு எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் செயல்படும் ஒரு சுதந்திரமான அமைப்பு என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
தொகுதி எல்லையை முறையாக தீர்மானிப்பதற்கு முன், மக்கள் தொகை தொடர்பான விவரங்கள் அலசி ஆராயப்பட வேண்டும். அத்துடன் மற்ற அம்சங்களும் சுயேச்சையான நிபுணர்களால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று திரு ஹெங் விளக்கினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற சிங்கப்பூர் இருநூற்றாண்டு மாநாட்டின்போது, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் பால் தம்பையா கேட்ட கேள்விக்கு திரு ஹெங் பதிலளித்தார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் தம்பையா, “பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தொகுதி எல்லைக் குழு சுதந்திரமாக செயல்படும் என்பதை ஏற்றுக்கொள்ள ஏதேனும் நல்ல காரணம் உள்ளதா?
“தொகுதி எல்லைகள் சுயேச்சையான அரசாங்க அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் உள்ள உயர்மட்ட அதி காரியின் கட்டளையின் பேரில் வேலை செய்கிறார்கள்,” என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர், “நீங்கள் சொன்னபடி அவர்கள் சுயேச்சையாகத்தான் செயல்படுகிறார்கள். இதுவரை அவர்கள் செய்ததை நீங்கள் பார்த்தால், பொத்தோங் பாசிர், ஹவ்காங் ஆகியவை முன்பு இருந்ததைப் போலத்தான் உள்ளன என்பது தெரிய வரும். அல்ஜுனிட் குழுத் தொகுதியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை,” என்பதைச் சுட்டினார்.
பொத்தோங் பாசிர் தொகுதி கடந்த பொதுத் தேர்தல் வரை முன்னைய எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் திரு சியாம் சீ தோங்கின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹவ்காங் தனித்தொகுதியும் அல்ஜுனிட் குழுத் தொகுதியும் பாட் டாளிக் கட்சியின் வசம் உள்ளன.
“ஆக, தொகுதி எல்லைக் குழுவின் சுதந்திரமான பணியின் நம்பகத்தன்மையை நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்,” என்று டாக்டர் தம்பை யாவுக்கு விளக்கமளித்தார்.
“புதிய வீடமைப்புப் பேட்டைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், சுயேச்சையாகச் செயல்படும் அரசாங்க அதிகாரிகள் நன்கு ஆராய்ந்து, தொகுதி எல்லைகளைச் சரியாக வரையறுப்பது பற்றி எங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்,” என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.
மீண்டும் டாக்டர் தம்பையா இடைமறித்து, “இருந்தும் அவர்கள் பிரதமரின் கட்டளையின்படிதானே நடக்கிறார்கள்,” என்று சொன்னார்.
“தொகுதி எல்லைக் குழு உறுப் பினர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
“அதே சமயத்தில் அவர்கள் செய்யும் பணியில் அரசாங்கத் தலையீடு இருக்கக்கூடும் என்றும் சொல்கிறீர்கள்,” என்று திரு ஹெங் அதற்குப் பதிலளித்தார்.
பொதுத் தூதர் பேராசிரியர் சான் ஹெங் சீ வழிநடத்திய கலந்துரையாடலில் திரு ஹெங் குக்கும் டாக்டர் தம்பையாவுக்கும் இந்தக் காரசார விவாதம் இடம் பெற்றது.
தொகுதி எல்லைக் குழுவின் உருவாக்கம் பற்றி தேர்தல் துறை கடந்த மாதம் 4ஆம் தேதி அறி வித்தது.
பொதுத் தேர்தல் நெருங்கு கிறது என்பதற்கு இதுதான் முதல் படி. அடுத்த பொதுத் தேர்தல் வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட வேண் டும்.