போதைப்பொருள் உட்கொண்ட ஒருவரது சிறுநீர் மாதிரிக்கு பதிலாக வேறொருவரின் சிறுநீர் மாதிரியை பரிசோதனைக்கு மாற்றி வைத்ததன்மூலம் நீதித்துறை தனது கடமையைச் செய்வதற்கு தடையாக இருந்ததன் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் (சிஎன்பி) சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்பட்ட மாவொங் மோ மின் என்பவரின் சிறுநீர் மாதிரிக்குப் பதிலாக ஸ்டாஃப் சார்ஜண்ட் முகம்மது ஹஃபிஸ் லான், 41, தனது சிறுநீரை சோதனைமாதிரியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் கட்டடத்தில் நடந்த இச்சம்பவத்தின்போது ஹஃபிஸ் சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்ததாகவும் அதற்கு 43 வயதுடைய ஸ்டாஃப் சார்ஜண்ட் அப்துல் ரஹ்மான் காதர் மற்றும் 31 வயதுடைய சார்ஜண்ட் முகம்மது ஸுஹாய்ரி ஸாய்துரி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக நம்பப்படுகிறது.
சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்ததால் மாவொங் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று சோதனை முடிவுகள் காட்டின. மாவொங் பற்றிய கூடுதல் விவரங்களும் அவரது வழக்கு தொடர்பான தகவல்களும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்ததற்காக மூன்று அதிகாரிகளுக்கும் பதிலுக்கு என்ன சன்மானம் கிடைத்தது என்பது குறித்துத் தகவல் இல்லை.
இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகள் மீதும் நேற்று நீதித்துறை தனது கடமையைச் செய்வதற்கு தடையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
தலா $10,000 பிணை மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹஃபிஸ் மீண்டும் அடுத்த மாதம் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
Staff Sergeant Abdul Rahman Kadir, Staff Sergeant Mohamed Hafiz Lan and Sergeant Muhammad Zuhairi Zainuri were each charged on Oct 18, 2019, with one count of intentionally obstructing the course of justice.ST PHOTOS: WONG KWAI CHOW