தொழில்நுட்பக் கல்விக் கழகமும் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் முன்கூட்டியே நடத்தும் மாணவர் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் பெரும்பாலான துறைகளுக்கு மாணவர்கள் இணையம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இவ்வாண்டு வழக்கநிலை, சாதாரணநிலை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் வாயிலாக இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் வழங்கும் நைடெக், உயர் நைடெக் துறைகளுக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் வழங்கப்படும் துறைகளில் சேர்ந்து பயில தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழகங்களின் இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்கள் அடுத்த மாதம் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாண்டில் ஜிசிஇ சாதாரண நிலை தேர்வு எழுதும் மாணவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் படிக்க அடுத்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 1ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
கொரோனா கிருமித்தொற்றால் நாடு பாதிக்கப்பட்டுள்ளபோதும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
மின்னஞ்சலுக்குப் பதிலாக இணையம் மூலம் நோர்காணல், இணையம் வாயிலாக முழு விவரங்களைச் சமர்ப்பித்தல் ஆகிய முறைகளை கல்வி நிலையங்கள் கையாள முயற்சி செய்யும். ஆனால் சில துறைகளுக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் அந்தந்த கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் வழங்கப்படும் துறைகளில் சேர்ந்து பயில விரும்பும் வேலை செய்யும் பெரியவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 5ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online