அண்மைய தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பில் செங்காங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஜேமஸ் லிம் சிங்கப்பூர் பொருளியல் மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு இன்று (ஜூலை 23) தெரிவித்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பேரில் இவரும் ஒருவர்.
36 பேரை உறுப்பினராகக் கொண்டிருக்கும் அந்த மன்றத்தின் நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில், எஸ்ஸெக் வர்த்தகப் பள்ளியில் இணைப் பேராசிரியராக இருக்கும் திரு ஜேமஸ் லிம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் யூஸ்டன் குவா அவ்வமைப்பின் 64வது குழுவுக்குத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர் 2009 முதல் அந்த மன்றத்தில் அங்கம் வகிப்பவர்.
1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த மன்றத்தில் அங்கம் வகிக்கும் பொருளியலாளர்கள், மற்ற நிபுணர்கள் சிங்கப்பூர் மற்றும் இந்த வட்டாரத்தின் பொருளியல் அம்சங்கள் குறித்து கலந்துரையாடுவர்.
அந்த மன்றத்தின் கௌரவ உறுப்பினர்களாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஆகியோர் உள்ளனர்.