கருத்தடை மாத்திரை விற்பனை கடந்த நான்கு ஆண்டுளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டு அதிகரித்தது. உடனடி கருத்தடை மாத்திரை, நீண்டகால கருத்தடை மாத்திரை ஆகியவற்றுக்கான விற்பனை இதில் அடங்கும் என்று IQVIA எனும் உலகளாவிய உயர் அறிவியல் பகுப்பாய்வு, மருத்துவ ஆய்வுச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 17,275 உடனடி கருத்தடை மாத்திரைப் பெட்டிகள் விற்கப்பட்டன. 2019ஆம் ஆண்டில் 11,952 உடனடி கருத்தடை மாத்திரைப் பெட்டிகள் விற்கப்பட்டன. கடந்த ஆண்டு 164,438 நீண்டகால கருத்தடை மாத்திரைப் பெட்டிகள் விற்கப்பட்டன. 2019ஆம் ஆண்டில் 141,760 நீண்டகால கருத்தடை மாத்திரைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.
“கருத்தடை மாத்திரைகளை வாங்க மருத்துவரிடமிருந்து மருத்துவச்சீட்டு தேவைப்படும். எனவே, சிங்கப்பூர் பெண்களிடையே கருத்தடை மாத்திரைக்கான தேவை அதிகம் இருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன,” என்று ‘பாயர்’ மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மலேசியா, சிங்கப்பூர், புருணை பிரிவுத் தலைவர் டாக்டர் வின்சண்ட் ருலண்ட் கூறினார்.
கருத்தடை மாத்திரை கேட்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்ததாக மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் மகப்பேறு, மகளிர்நல மருத்துவரான டாக்டர் டான் தியோம் சாய் தெரிவித்தார்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார். கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள நிலையற்றதன்மை, வேலை இழப்புகள் ஆகியவை காரணமாக குழந்தை பெறுவதை சிலர் ஒத்திவைத்திருக்கக்கூடும் என்றார் அவர்.
சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் சில நாடுகளில் கருத்தடை மாத்திரைகளின் விலை குறைவு. ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக தற்போது வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கருத்தடை மாத்திரைகள் சிங்கப்பூரிலேயே வாங்கப்படுவதாக அவர் கூறினார்.