ஈசூனில் பொது இடத்தில் முகக்கவசம் அணிந்திராத மூதாட்டி ஒருவரை போலிஸ் அதிகாரிகள் அணுகிய சம்பவம் தொடர்பாக உடலுடன் சேர்த்து அணியப்படும் படக்கருவியில் பதிவான இரு காணொளிக் காட்சிகளை போலிஸ் வெளியிட்டிருக்கிறது.
போலிஸ் அதிகாரி ஒருவர் அருகிலுள்ள ஒரு கடையில் இருந்து அந்த மூதாட்டிக்கு உணவுப் பொட்டலம் வாங்கித் தருவதை அக்காணொளி காட்டுகிறது என்றும் அவரை இழிவுபடுத்தவோ கடிந்துரைக்கவோ இல்லை என்றும் ஓர் அறிக்கை வாயிலாக சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்துள்ளது.
மாறாக, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய அம்மூதாட்டியிடம் நினைவுபடுத்துமாறு அவருடன் வந்த பணிப்பெண்ணிடம் அந்த போலிஸ் அதிகாரி சொன்னதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, அந்தச் சம்பவம் தொடர்பில் ‘தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா (டிஓசி)’ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது. அதில் அந்த மூதாட்டியுடனான நேர்காணலும் இடம்பெற்றிருந்தது. அதில், போலிசார் தமக்கு உணவு வாங்கித் தந்தனர் என்பதை அப்பெண்மணி மறுத்திருந்தார்.
இம்மாதம் 17ஆம் தேதி மாலையில் இடம்பெற்ற அச்சம்பவத்தின்போது, முகக்கவசம் அணியாததற்காக அம்மூதாட்டியை போலிஸ் அதிகாரி கண்டித்ததை ஒலிப்பதிவு காட்டுகிறது என்றும் அந்தக் காணொளியில் கூறப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் இம்மாதம் 19ஆம் தேதி போலிஸ் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தது.
இதையடுத்து, திருத்தம் வெளியிடும்படி ‘டிஓசி’க்கும் அதைப் போன்றே செய்தி வெளியிட்டிருந்த மற்ற தளங்களுக்கும் பொய்ச் செய்திச் சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக நியூ ஃபீனிக்ஸ் பார்க்கில் உள்ள போலிஸ் தலைமையகத்தில் இருந்தபடி ஊடகங்களிடம் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், இழிவான, நெறிபிறழ்ந்த, தீய நோக்கத்துடன் போலிசைத் தாக்கும் வகையில் ‘டிஓசி’யின் அண்மைய காணொளி அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மூதாட்டியை ‘டிஓசி’ தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது என்றும் அவர் சொன்னார்.
‘டிஓசி’ மீது மேலும் நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து போலிஸ் பரிசீலித்து வருவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
“மலேசிய எழுத்தாளர்களைக் கொண்டு அரசாங்கத்தைத் தாக்கி எழுதுவதை ‘டிஓசி’ வழக்கமாகச் செய்து வருகிறது. அவர்களின் வன்மத்தையும் நஞ்சையும் அரசியலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். போலிஸ் அதிகாரிகளைத் தாக்க வேண்டாம், அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் தங்களது பணிகளை மட்டுமே செய்கின்றனர்,” என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
அம்மூதாட்டியின் மகளுடன் பேசியதாக போலிஸ் தெரிவித்தது. அப்போது, தம் தாயாருக்கு முதுமை மறதிநோய் இருப்பதை அவர் ஒத்துக்கொண்டதாகவும் சம்பவம் குறித்து அவருக்குத் தெளிவாக நினைவில் இல்லாமல் இருக்கலாம் என்று அவர் சொன்னதாகவும் போலிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஊடகத்தினர் தம்மைச் சந்திக்க அம்மூதாட்டியின் மகள் விரும்பவில்லை என்றும் தம் தாயாரின் நிலையை அறிய முயலாமல் ‘டிஓசி’ அவரை நேர்கண்டு, இணையத்தில் காணொளி வெளியிட்டது தமக்கு வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது.