ஈசூன் வட்டாரத்தில் முகக்கவசம் அணியாத மூதாட்டியிடம் போலிஸ் அதிகாரிகள் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக அண்மையில் தி ஆன்லைன் சிட்டிசன் தளம் பதிவேற்றம் செய்திருந்த காணொளிப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மையல்ல என்று தெளிவுபடுத்திய போலிசும் உள்துறை அமைச்சும் நடந்தது என்ன என்பதை எடுத்துக்கூறியிருந்தன.
இந்நிலையில், உண்மை வெளிச்சத்துக்கு வந்தது மகிழ்ச்சி தருவதாக இந்த விவராகத்தில் சம்பந்தப்பட்ட 45 வயது போலிஸ் ஆய்வாளர் ஜெஃப் லிம் கொக் ஹுவீ தெரிவித்தார்.
இவர், ஈசூன் சவுத் அக்கம்பக்க போலிஸ் நிலையத்தின் துணைக் குழுத் தலைவராவார்.
மூதாட்டி ஒருவர் பொது இடத்தில் முகக்கவசம் அணியவில்லை என்றும் அவர் வழி தெரியாமல் குழப்பத்தில் இருந்ததாகவும் இம்மாதம் 17ஆம் தேதியன்று போலிசுக்குத் தகவல் கிடைத்ததாக ஆய்வாளர் லிம் தேரிவித்தார்.
அதையடுத்து சக அதிகாரிகள் மூவருடன் மூதாட்டி இருந்த இடத்துக்குச் சென்றதாக அவர் கூறினார்.
“அவர் பதற்றம் அடையாமல் இருக்க அவருடன் அமர்ந்து பேச முயன்றதாக ஆய்வாளர் லிம் தெரிவித்தார்.
“மூதாட்டியிடம் பேசியதில் அவர் தமது நண்பர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. அவர் பசியுடன் இருப்பார் எனக் கருதி, சாப்பிட ஏதாவது வேண்டுமா என அவரிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த அந்த மூதாட்டி, இரண்டு கோழித் துண்டுகள் வேண்டும் என என்னிடம் கூறினார். இரண்டு கோழித் துண்டுகளை வாங்கி அவரிடம் கொடுத்தேன்,” என்று ஆய்வாளர் லிம் தெரிவித்தார்.
சொந்த செலவில் அந்த மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்ததாகக் ஆய்வாளர் லிம் கூறினார். அதுமட்டுமல்லாது, அந்த மூதாட்டியை வீட்டுக்கு அனுப்ப முன்வந்ததாகவும் ஆனால் மூதாட்டி மறுத்துவிட்டதாகவும் ஆய்வாளர் லிம் தெரிவித்தார்.
அவருடன் பேசியதில் அந்த மூதாட்டி ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தமக்குத் தோன்றியதாக ஆய்வாளர் லிம் கூறினார். அந்த மூதாட்டிக்கு அவரது பெயர், வீட்டு முகவரி ஞாபகம் இல்லை என்றார் ஆய்வாளர் லிம்.
அருகில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் அந்த மூதாட்டி வசிப்பதாக வழிப்போக்கர் கூறியதாக ஆய்வாளர் லிம் கூறினார்.
மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடிக்க ஆய்வாளர் லிம்முடன் இருந்த இரண்டு போலிஸ் அதிகாரிகள் அந்தக் கட்டடத்தில் வீடு வீடாக ஏறி, இறங்கினர். சக அதிகாரி ஒருவருடன் ஆய்வாளர் லிம் மூதாட்டியுடன் இருந்தார்.
வீட்டைக் கண்டுபிடித்ததும் கீழே இறங்கி மூதாட்டியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மூதாட்டியின் பணிப்பெண்ணிடம் அதிகாரிகள் கூறினர்.
மூதாட்டியை அழைத்துச் செல்ல பணிப்பெண் வந்ததும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மூதாட்டிக்கு நினைவூட்டியதாக ஆய்வாளர் லிம் கூறினார்.
“நான் குரலை உயர்த்திப் பேசவில்லை,” என்று தி ஓன்லைன் சிட்டி ஏஷியா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
நடந்தது திரித்துக் கூறப்பட்டு நானும் எனது சக அதிகாரிகளும் எதிர்மறையான கோணத்தில் காட்டப்படுவோம் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
“எனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். ஆனால் பொதுமக்களுக்கு உதவவும் எங்களது கடமையைச் செய்யவும் இந்தச் சம்பவம் தடையாக இருக்கக்கூடாது,” என்றார் அவர்.