குடியிருப்பாளர்களுக்கு எம்.பி.க்கள் வலியுறுத்து: பேட்டையைத் துப்புரவாக வைத்துக்கொள்க

குடியிருப்பாளர்களுக்கு எம்.பி.க்கள் வலியுறுத்து: பேட்டையைத் துப்புரவாக வைத்துக்கொள்க

2 mins read
e5bfda50-ba2e-4f66-b4e3-b4334f3c3782
-

சிங்கப்பூரில் குடியிருப்புப் பேட்டைகளில் துப்புரவு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அதிகமான மக்கள் பெரும்பாலான நேரத்தை வீடுகளிலேயே கழிக்கிறார்கள் என்பதால் பேட்டைகளில் சேரும் குப்பைக்கூளங்களும் அதிகமாகி இருக்கின்றன.

இத்தகைய ஒரு சூழலில், குடியிருப்பாளர்கள் தங்கள் பங்கை ஆற்றி உதவ வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் நாடு திரும்பிவிட்டனர். எல்லைகள் மூடப்பட்டு இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக வேறு துப்புரவு ஊழியர்களை அமர்த்துவது சிரமமாகி இருக்கிறது. இதே நேரத்தில் குப்பை கூளங்களும் அதிகம் சேருகின்றன.

தெம்பனிஸ் குழுத்தொகுதி உறுப்பினர் பே யாம் கெங், மவுண்ட்பேட்டன் உறுப்பினர் லிம் பியோவ் சுவான், புக்கிட் பாஞ்சாங் உறுப்பினர் லியாங் எங் ஹூவா ஆகியோர் நிலவரங்களை எடுத்துக் கூறி குடியிருப்பாளர்கள் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மக்கள் கண்டபடி குப்பைகளைப் போடாமல் பொறுப்புடன் நடந்தகொள்ளவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

குப்பைகளை அப்புறப்படுத்தி பேட்டைகளைத் துப்புரவாக வைத்திருப்பதில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பு இருப்பதை நாடாளுமன்ற உறுப் பினர்கள் சுட்டினர்.

விரயமாகும் உணவுப் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றால் கரப்பான் பூச்சிகள் பெருக்கும். எலிகளும் அதிகமாகும். இதனால் பேட்டையின் துப்புரவு சீர்கெடும்.

ஓர் இடத்தில் கொசு தலைகாட்டினால் அவை பல்கிப்பெருகி டெங்கி காய்ச்சலுக்கும் வழி வகுத்துவிடும் என்று மவுண்ட்பேட்டன் உறுப்பினர் திரு லிம் கூறினார்.

குப்பைகள் அதிகம் குவியும் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய சுற்றுப்புற ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புக்கிட பாஞ்சாங் உறுப்பினர் திரு லியாங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்