அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வரவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானப் பயணம் நேற்று முன்தினம் (நவம்பர் 3) ரத்து செய்யப்பட்டது.
அந்த விமானம் புறப்படவிருந்தபோது அதன் இறக்கைப் பகுதி, தரையில் இருந்த மற்றொரு விமானத்துடன் உரசியது. இதனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து SQ33 எனும் அந்த விமானம் அன்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணிக்குப் புறப்படவிருந்தது என்று எஸ்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பொறியாளர்களின் பரிசோதனைக்காக அந்த விமானம் பாதுகாப்பாக நிறுத்துமிடத்துக்குத் திரும்பியதாக அவர் கூறினார்.
விமானத்தில் இருந்தவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகளை ஹோட்டலில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை எஸ்ஐஏ செய்தது. அடுத்த நாள் அவர்கள் வேறொரு விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அது செய்தது.
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நேற்றிரவு 10.11 மணிக்கு வேறோரு விமானத்தில் பயணிகள் புறப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதால் இதுகுறித்து மேல்விவரம் அளிக்க இயலாது என்று எஸ்ஐஏ கூறியது.