அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் 11 வயது இரட்டையரின் சடலங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 21) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) அந்தக் கால்வாய் உள்ள பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில், கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள விளையாட்டு இடம் ஒன்றுக்கு அருகே உள்ள அந்தக் கால்வாய்க்கு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணை அதிகாரிகள் வந்தனர்.
சாதாரண உடை அணிந்திருந்த அவர்கள், அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்டனர். அந்தக் கால்வாய்க்குள் இறங்குவதற்கான பாதையைக் கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
தாளில் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாரிகளில் ஒருவர், பின்னர் கால்வாய்க்குள் இறங்கினார். கால்வாய் வழியாக உள்ள தடுப்புவேலிக்கும் கான்கிரீட் அடிவாரத்துக்கும் இடையிலான தூரத்தை அவர் அளவிட்டதாகத் தெரிகிறது.
பின்னர், அங்குள்ள தரைவீடுகளுக்குப் பக்கத்திலுள்ள ஒரு நடைபாதை வழியாக அந்த அதிகாரிகள் சற்று தூரம் நடந்து சென்றனர்.
ஏறக்குறைய 10 நிமிடங்கள் கழித்து அந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே, அந்த இரட்டைச் சகோதரர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு மண்டாய் தகனச்சாலையில் தகனம் செய்யப்பட்டன.
சேவியர் யாப் ஜுங் ஹொவ்ன், 48, எனும் அந்த இரட்டையரின் தந்தைமீது நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.