அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள விளையாட்டு இடம் அருகே உள்ள கால்வாயில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) மாலை, 11 வயது இரட்டைச் சகோதரர்கள் இருவர் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர்.
தோ யி பகுதியின் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள அந்த விளையாட்டு இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணியளவில் உதவி கோரி தனக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை இன்று சனிக்கிழமை (ஜனவரி 22) கூறியது.
இதன் தொடர்பில் சந்தேக ஆடவர் ஒருவரை காவல்துறையினர் நேற்று இரவு தேடி வந்தனர்.
அந்த ஆடவரின் அடையாளம் குறித்து டாக்சி ஓட்டுநர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு கடைசியாக அந்த ஆடவர் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
அவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என்றும் சாம்பல் நிற சட்டையும் விளையாட்டுக் காலணிகளும் அணிந்திருந்தார் என்றும் வர்ணிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் கைது நடவடிக்கை எதுவும் இன்னும் இடம்பெறவில்லை என அறியப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, அந்த விளையாட்டு இடம் அருகே 11 வயதுச் சகோதரர்கள் இருவர் அசைவின்றி கிடந்ததைக் கண்டறிந்தனர். அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.
அவ்விரு சிறுவர்களும் இரட்டைச் சகோதரர்கள் என நம்பப்படுகிறது. இயற்கைக்கு மாறான அவர்களின் மரணம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு இன்று நண்பகல்வாக்கில் அங்கு சென்றது.
கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் இரு காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. சாதாரண உடை அணிந்திருந்த அதிகாரிகள் சிலர், அங்குள்ள குடியிருப்பாளர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.
காவல்துறையின் கூர்கா படையினர், அங்குள்ள கால்வாயில் நடந்து சென்றனர். விளையாட்டு இடத்திற்குப் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் ஆதாரங்களைத் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அங்குள்ள குடியிருப்பாளர்கள் சிலருடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு பேசியது. அந்தப் பகுதி பொதுவாக அமைதியாக இருக்கும் எனக் கூறிய அவர்கள், மாலை வேளையில் பலர் அப்பகுதியில் மெதுவோட்டத்தில் ஈடுபடுவர் என்று கூறினர்.
நேற்று மாலை 6.45 மணியளவில், அந்தப் பகுதியில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததைத் தாங்கள் கண்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.
நேற்று இரவு மழை பெய்யவில்லை என்றும் கால்வாயில் நீர் நிறைந்து காணப்படவில்லை என்றும் அவர்கள் விவரித்தனர்.
நேற்று நள்ளிரவுவாக்கில் இரு சடலங்களை அதிகாரிகள் வாகனம் ஒன்றில் ஏற்றியதைத் தாம் கண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.
“சடலங்கள் அகற்றப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மஞ்சள் நிற கார் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது,” என்றார் அவர்.
“இந்தப் பகுதி ஒதுக்குப்புறமாக இருந்தாலும், அழகாக இருக்கும். இங்கு கொசுப் பிரச்சினை காரணமாக என்னுடைய பேரப்பிள்ளைகள் மற்றொரு பூங்காவில் விளையாட விரும்புவர்,” என்று மேலும் கூறிய அந்தக் குடியிருப்பாளர், பூங்காவில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களுக்கு இதுவரை கவலை எழுந்ததில்லை என்றார்.
அந்த விளையாட்டு இடத்தைச் சுற்றி தரைவீடுகள் உள்ளன.
இந்நிலையில், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன், “இது ஒரு பெருந்துயரச் சம்பவம். பெற்றோராக இருப்போர் இதை நினைத்துகூட பார்க்க முடியாது. நமது சமூகத்திற்கு இந்தச் செய்தி பேரதிர்ச்சியாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.
அந்தச் சிறுவர்களின் மரணம் குறித்து ஊகச் செய்திகள் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் காவல்துறையிடம் இருந்து அதிகாரபூர்வத் தகவல்களுக்காக காத்திருக்குமாறும் குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
“எங்களது சிந்தனைகளும் பிரார்த்தனைகளும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தார் பற்றியே உள்ளன,” என்றார் அவர்.