அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 11 வயது இரட்டைச் சகோதரர்களின் உடல்கள் இன்று திங்கட்கிழமை இரவு (ஜனவரி 24) தகனம் செய்யப்பட்டன.
அவர்களின் சவப்பெட்டிகளைத் தாங்கிச்செல்லும் இரு வாகனங்கள் இரவு 7.45 மணியளவில் மண்டாய் தகனச்சாலைக்கு வந்தன.
ஆஸ்டன் யாப் காய் ஷெர்ன், ஈதன் யாப் ஈ செர்ன் எனப் பெயருடைய அந்தச் சிறுவர்களின் உருவப்படங்கள் அந்த வாகனங்களின் முன்னால் வைக்கப்பட்டிருந்தன.
இரவு 8.15 மணிக்கு பௌத்த சமய வழிபாடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அந்த இரட்டையரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
அவ்விரு சகோதரர்களின் உடல்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டதாக இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த திரு ஃபோங் சுன் சியோங் என்பவர் தெரிவித்தார்.
அவர்களுடைய உடல்கள் எந்த நிலையில் உள்ளன என்பது தெரியாததால், நேரம் தாழ்த்தாமல் உடல்களைத் தகனம் செய்துவிடுமாறு அந்த இரட்டையரின் குடும்பத்தாருக்குத் தாம் அறிவுறுத்தி இருந்ததாக திரு ஃபோங் முன்னதாகக் கூறியிருந்தார்.
கடந்த நான்கு நாள்களாக அந்த இரட்டையரின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படாததே அதற்குக் காரணம் என்றார் திரு ஃபோங். அவர்களின் குடும்ப நண்பராவார் திரு ஃபோங்.
அந்த இரட்டையர்களுடைய தந்தையான சேவியர் யாப் ஜுங் ஹொவ்ன், 48, என்பவர்மீது இன்று திங்கட்கிழமை (ஜனவரி 24) நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
யாப்பை ஒருவாரத்திற்கு விசாரணைக் காவலில் வைக்கவும் கூடுதல் விசாரணைக்காக அவரைச் சம்பவ இடத்திற்கு அனைத்துச் செல்லவும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
யாப்பின் வழக்கு ஜனவரி 31ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.