அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) 11 வயது இரட்டைச் சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடைய தந்தைமீது இன்று திங்கட்கிழமை (ஜனவரி 24) நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
காணொளி இணைப்புமூலம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சேவியர் யாப் ஜுங் ஹொவ்ன், 48, எனும் அந்த ஆடவர். அவரிடம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள விளையாட்டு இடம் அருகே உள்ள கால்வாயில் வெள்ளிக்கிழமை மாலை 4.23 மணிக்கும் 6.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஈதன் யாப் ஈ செர்ன் எனும் சிறுவனைக் கொன்றதாக சேவியர் யாப்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
வெள்ளை நிற போலோ டீ-சட்டையும் நீல நிற முகக்கவசமும் அணிந்திருந்த யாப்பிடம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது எந்தவொரு உணர்ச்சியுமின்றி காணப்பட்டார்.
யாப்பை ஒருவாரத்திற்கு விசாரணைக் காவலில் வைக்கவும் கூடுதல் விசாரணைக்காக அவரைச் சம்பவ இடத்திற்கு அனைத்துச் செல்லவும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இன்று திங்கட்கிழமை காலை யாப்மீது ஒரு குற்றச்சாட்டு மட்டும் சுமத்தப்பட்டது.
கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
இதற்கிடையே, அந்த இரட்டையரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள இயலாது அவர்களுடைய குடும்பத்தார் பெரும் துக்கத்தில் இருப்பதாக யாப்பின் வழக்கறிஞர் திரு அனில் சிங் சந்து நீதிமன்றத்தில் கூறினார்.
“ஊடகத்துறையினர் இன்று காலை நீதிமன்றத்தில் உள்ளனர். உயிரிழந்தவர்கள் 11 வயதுடைய இரு சிறுவர்கள். கடந்த சில நாள்களாக இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிடுவதில் ஊடகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
“என்றாலும், அந்த இரு சிறுவர்களின் இழப்பிலிருந்து மீண்டுவர, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தனிமையை (privacy) வழங்க ஊடகத்துறையினரிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் திரு அனில்.
ஈதன், ஆஷ்டன் எனும் பெயருடைய அந்த இரட்டையர்கள், சிறப்புத் தேவையுடைய சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. எங் கோங் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அவர்கள் படித்தனர் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், யாப்பின் வழக்கு ஜனவரி 31ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.