இந்திய மரபுடைமை நிலையத்துக்குள் முதல் முறையாக காலடி வைத்த திரு வைத்தியநாதனுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி, பெருமை!
"இது நான் கட்டிய கட்டடம். இங்கே இத்தனை காட்சிப் பொருட்களை வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று பெருமிதத்தில் அவர் கூறினார்.
கல்லும் மண்ணும் கம்பியுமாக கட்டுமானப் பணி நடந்த இடத்தில் கம்பிச் சாரங்களில் ஏறி, இறங்கி, உடம்பெங்கும் சிமெண்டு தூசி படிய பல மாதங்கள் கேம்பல் லேனில் வேலை பார்த்த அவர் கட்டடப் பணிகள் முடிந்த பின்னர் உள்ளே சென்று பார்த்ததில்லை.
"உள்ளே போய் பார்க்கலாமா என்று எனக்குத் தெரியாது," என்ற திரு வைத்தியநாதன் ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் ஒவ்வொரு காட்சிப் பொருளையும் பார்த்தார்.
"சிங்கப்பூர் இந்தியர்கள் பற்றி நிறைய விஷயங்களை இங்கே தெரிந்துகொண்டேன். இங்குள்ள தமிழர்களின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது இங்கு வந்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இது எனக்கு வியப்பூட்டும் அனுபவமாக இருந்தது ,"என்று வைத்தியநாதன் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக இங்குப் பணிபுரியும் 45 வயது திரு வைத்தியநாதன், இந்திய மரபுடைமை நிலையம், தேக்கா மால், தி வெர்ஜ் போன்ற கட்டடப் பணியில் மேலளாராக இருந்தார்.
ஆனால் இதுவரை அவர் அந்தக் கட்டங்களுக்கு உள்ளே சென்று சுற்றிப் பார்த்ததில்லை.
இந்திய மரபுடைமை நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து சுமார் எட்டு ஆண்டுகளான நிலையில், முதன்முறையாக இந்த நிலையத்தை சென்ற வாரம் அவர் சுற்றிப்பார்த்தார்.
இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், தாய்லந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 45 ஊழியர்கள் பங்கேற்ற இந்தச் சுற்றுலாவை வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில், தொண்டூழியர்கள் இவர்களுக்கு நிலையத்தைச் சுற்றிக்காட்டினர்.
சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாறு, கலாசாரம், மரபு போன்றவற்றை எடுத்துக்காட்ட முதன்முறையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக 'வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம்' கூறியது.
"பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் விடுப்பு நாட்களில், விலங்கியல் தோட்டம், பறவை பூங்கா, மரினா பே போன்ற சுற்றுலாத் தலங்களுக்கே செல்வார்கள். மரபுடைமை நிலையங்கள், அரும்பொருளகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, சிங்கப்பூரின் பல இன கலாசாரத்தையும், வரலாற்றையும் அவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. தாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றி அவர்கள் அறிந்து வைத்திருப்பது முக்கியம்," என்று வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் மூத்த அதிகாரி சதீஷ் நாயுடு குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் வரலாற்றுடன் தமிழ்நாட்டு வரலாற்றையும் அறிந்துகொள்ள சுற்றுலா உதவியதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறினர்.
"இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் பற்றியும், இந்நாட்டில் அவர்களுடைய பங்களிப்பு பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். தமிழர்களின் நாகரிகம், நம்முடைய கலாசாரம் பற்றிய புதிய தகவல்களை இங்கு வந்த பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன். தமிழரகளின் மரபுடைமை இந்தியாவைவிட சிங்கப்பூரில் சிறப்பாகக் கட்டிக்காக்கப்படுவது குறிப்பிடத்தக்கது ," என 45 வயதான திரு சுகுமார் சொன்னார்.
உலகெங்கும் கிருமித்தொற்று சூழலால், கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களை நேரில் பார்க்க முடியாத நிலை. அதனால் சிலருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது.
"இங்கு என் நண்பர்களுடன் வந்து, சுற்றுலாவில் கலந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. என் நண்பர்கள், உறவினர்களை இந்திய மரபுடைமை நிலையத்துக்கு வர ஊக்குவிப்பேன்," என்று தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 25 வயதான செந்தமிழ்ச்செல்வன் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் அளித்த நல்ல கருத்துக்களின் அடிப்படையில், இதுபோன்ற சுற்றுலாக்களை மற்ற மரபுடைமை நிலையங்களில் நடத்த வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் திட்டமிட்டுள்ளது.