சென்றாண்டு கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தபோது, அவசரநிலை மருத்துவச் சேவைகளுக்காகக் கூடுதல் அழைப்புகள் வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு 213,615 அழைப்புகள் கிடைத்தன. ஒப்புநோக்க, 2020ஆம் ஆண்டு 190,882 அழைப்புகள் வந்தன.
கிருமித் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலர் 995 எனும் எண்ணை தொடர்புக்கொண்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
அப்படி அழைத்து பலருக்குக் கடுமையான தொற்றுப் பாதிப்பு இல்லை. அதனால் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்ல வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சென்ற ஆண்டு தீச் சம்பவங்கள் குறித்து 1,844 அழைப்புகள் கிடைத்தன. 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,877ஆக இருந்தது.
சென்றாண்டு ஏற்பட்ட தீச் சம்பவங்களில் 194 பேர் காயமுற்றனர், மூவர் மாண்டனர்.
அதற்கு முந்தைய ஆண்டில் 184 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன, ஒருவர் மாண்டார்.
பெரும்பாலான தீச் சம்பவங்கள் மின்சாரத்தினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.