ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் செவ்வாய்க்கிழமை (மே 17) அன்று தீப்பிடித்ததை அடுத்து, சுமார் 35 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை 11.35 மணிக்கு தீச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் கூறியது.
ஜாலான் புக்கிட் மேரா புளோக் 117ன் ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டில் தீ பற்றியது.
மூச்சுவிட உதவும் சாதனங்களை அணிந்துகொண்டு தீயணைப்பாளர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டி இருந்தது.
அந்த நேரத்தில் யாரும் வீட்டுக்குள் இல்லை, என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பதிவிட்டது.
வீட்டின் படுக்கை அறையில் தீப்பற்றிக் கொண்டதாக கூறப்பட்டது. மின்சாரப் பிரச்சினையால் தீ மூண்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
முன்னெச்செரிக்கையாக, அருகில் இருந்த வீடுகளிலிருந்து 35 பேர் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
அந்த வீட்டில் வசித்த பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் தீ மூண்ட நேரத்தில் வெளியே சென்றிருந்தனர் என்று குமாரி இந்திராணி ராஜா கூறினார்.
அவர்கள் பக்கத்து புளோக்கில் உள்ள வாடகை வீட்டில் தங்குவதற்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வட்டாரக் கிளை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான குமாரி இந்திராணி அது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.