சிங்கப்பூரில் இருக்கும் தமிழ் கத்தோலிக்கர்கள், இந்துஸ்தானிகள், குஜராத்திகள், பெங்காலிகள், தெலுங்கினத்தவர் ஆகியோரின் வரலாற்றை பறைசாற்றும் புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சமூகங்கள் பற்றிய ஆவணப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, நாட்டின் 5.6 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 9 விழுக்காட்டினர் இந்தியர்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழ் இந்துக்கள். ஆகையால் மற்ற இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்’ என்று இத்திட்டத்தை வழிநடத்திய தேசிய பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராய் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு சமூகமும் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த வரலாறு, அவற்றின் கலாசாரங்கள், விழாக்கள், அவர்களுடைய தேவைக்காகக் கட்டப்பட்ட நிலையங்கள், வழிபாடு தலங்கள் போன்ற முக்கியமான இடங்களின் தகவல்களும் இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் இந்நூல்களைத் தேசிய நூலகத்தில் இரவல் பெறலாம்.