சிலேத்தார் விமான நிலையம் ஈராண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு முதல் விமானமாக தரையிறங்கியது மலேசியாவின் ஃபயர்ஃபிளையின் FY3124 விமானம். இன்று காலை சுபாங்கிலிருந்து புறப்பட்ட விமானம் இங்கு காலை 8.50க்கு தரையிறங்கியது. விமானத்தில் 59 பயணிகள் இருந்தனர்.
விமானத் துறை மீட்சியடைந்து வருவதைக் குறிக்கும் விதமாக இன்றைய நிகழ்வு அமைந்தது.
ஃபயர்ஃபிளை நிறுவனம் சிங்கப்பூருக்கும் சுபாங்குக்கும் இடையே தினமும் நான்குபயணங்களை மேற்கொள்ளும்.
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தின்போது 16 மார்ச் 2020ல் சிலேத்தார் விமான நிலையம் சேவைகளை நிறுத்தியது.
அதற்கு முன்பு நிலையத்தில் இருநாடுகளுக்கிடைய ஆறு விமானச் சேவைகள் இருந்தன.
தேவை அதிகரித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் விமானச் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் இருப்பதாக ஃபயர்ஃபிளை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் சீ குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.
கிருமித்தொற்றுக்கு முன்பு, சிங்கப்பூரிலிருந்து சுபாங்கிற்கு செல்லும் விமானங்களில் சுமார் 50 விழுக்காட்டு இருக்கைகள் நிரப்பப்பட்டிருக்கும் என்ற தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சாங்கி விமான நிலையத்தோடு ஒப்பிடும்போது சிலேத்தார் விமான நிலையத்தில் குடிநுழைவுச் சோதனைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் குறைவாக இருப்பதால் நேரத்தை முக்கியமாகக் கருதும் பயணிகள் சிலேத்தார் வழியாக பயணம் செய்யவிரும்புவர் என திரு சீ கூறினார்.
ஃபயர்ஃபிளை சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்து கிளம்பி சிங்கப்பூரை வந்தடைய மூன்றே மணி நேரம்தான் எடுக்கிறது.