மொத்தம் $539,910 வரி ஏய்ப்பு தொடர்பில் சந்தேகப் பேர்வழிகள் மூவர் புதன்கிழமை (ஜூலை 11) கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடவடிக்கையின்போது வரி செலுத்தப்படாத மொத்தம் 5,044 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டன.
உபி கிரசென்டிலுள்ள ஒரு தொழிற்கட்டடத்தின் ஒரு பகுதியைக் கண்காணித்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதற்குள் ஒருவர் நுழைந்ததைக் கண்டு சோதனை நடத்த முடிவு செய்தனர்.
கட்டடத்திற்குள் காணப்பட்ட சோஃபா படுக்கைகளின் இடுக்குகளுக்குள் 3,004 சிகரெட் பெட்டிகளும் பழுப்பு நிறப் பெட்டிகளுக்குள் 2,040 சிகரெட் பெட்டிகளும் பதுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைதான மூவர் மீதும் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்கிறது.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்குவது, விற்பது, வேறு இடத்திற்குக் கொண்டுசேர்ப்பது, விநியோகம் செய்வது, வைத்திருப்பது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.
குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்ட தொகையைக் காட்டிலும் 40 மடங்குவரை அபராதம், ஆறாண்டுவரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.