கொவிட்-19 கிருமித்தொற்றை உலகெங்கும் பேரளவில் பரவும் நோயாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து, வரும் மார்ச் 11ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.
இதனை நினைவுகூரும் நோக்கில் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை சன்டெக் சிட்டி ஏட்ரியம் (மாநாட்டு மையம்) அரங்கில் ‘ஃபைசர் சிங்கப்பூர்’ ஒரு கண்காட்சியை நடத்துகிறது.
‘புரோஜெக்ட் வேக்ஸ்: எது முக்கியமோ அதைத் தற்காக்கவும்’ என்ற பெயரிலான இக்கண்காட்சி, சிங்கப்பூரின் கொவிட்-19 தொற்றுக்கால முக்கிய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகிறது.
2020க்கு அழைத்துச் செல்லும் ‘ஃபைசர் கியூப்’புடன் தொடங்கி, ஒளியூட்டப்பட்ட சுரங்கப்பாதையுடன் நிறைவடைகிறது இக்கண்காட்சி.
கண்கவர் ஒளிக் காட்சிகள், முகக்கவசங்களாலான புகைப்படச் சாவடி, கொவிட்-19 தடுப்பூசியின் பின்னணியில் உள்ள அறிவியல் விளக்கங்கள் ஆகியவற்றையும் காணமுடியும்.
ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிச் செயல்பட சிங்கப்பூரர்களை ஒன்றிணைப்பதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.
அதனால், ஆரோக்கிய வாழ்வு சார்ந்த ஆறு ஓவியங்களும் காட்சிப்படுத்தப்படும். அவற்றை உருவாக்கிய உள்ளூர் ஓவியர் ஆ குவோவை சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி பொதுமக்கள் சந்திக்கலாம்.
வார இறுதியின் இரு நாள்களிலும் மீடியாகார்ப் கலைஞர்கள் வருகையாளர்களை மகிழ்விப்பர்.