பெய்ஜிங்: சிங்கப்பூர்-சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உயர்நிலை கலந்துரையாடல் சந்திப்பு இவ்வாண்டு ஜூன் மாதம் மீண்டும் சிங்கப்பூர் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்-சீன சமுதாய ஆளுமை கலந்துரையாடல் சந்திப்பு சமுதாய ஆளுமை தொடர்பாக இரு நாடுகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முக்கியமான ஒன்று என்று திரு டியோ சீ ஹியன் விளக்கினார். இந்தக் கலந்துரையாடல் சந்திப்பு கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. சீனாவின் பாதுகாப்புத் துறைத் தலைவர் சென் வெங்கிங் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) அன்று சந்தித்தபோது திரு டியோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இவ்வாண்டு ஜூனில் சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதில் சீனத் தலைவர் சென்னை வரவேற்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,” என்று திரு டியோ சீ ஹியன் டியவ்யுதாய் என்ற சீன அரசின் விருந்தினர் மாளிகையில் கூறினார். சிங்கப்பூர்-சீனத் தலைவர்கள் இருவரும் முதன் முதலாக இந்த அரசினர் விருந்தினர் மாளிகையில்தான் சந்தித்தனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே, சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளின் அரசாங்க மற்றும் கட்சி அதிகாரிகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள், சீனா பற்றிய குடியரசின் புரிந்துணர்வை அதிகரித்துள்ளது, அது, இரு நாடுகளும் ஆழமான நிலையில் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுக்கிறது என்று திரு டியோ தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் (ஆளுமை குறித்த தேசிய பயிற்சிக் கழகம்) கட்சிப் பள்ளியின் தலைவர் சென் ஸியுடன் மார்ச் 21ஆம் தேதி பேச்சு நடத்திய திரு டியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான மனிதவள மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து மிக நீண்ட பட்டியல் உள்ளது,” என்று குறிப்பிட்டார். இரு நாடுகளும் மாறி மாறி நடத்தும் தலைமைத்துவம் குறித்த வருடாந்திர உயர்மட்ட சிங்கப்பூர், சீனா கருத்தரங்கும் இதில் அடங்கும். பெய்ஜிங்கில் 2023ஆம் ஆண்டு,செம்படம்பரில் நடைபெற்ற ஒன்பதாவது கருத்தரங்கிற்கு கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தலைமை தாங்கினார்.
இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பரிமாற்றங்கள், ஒவ்வொரு தரப்பும் மற்றவரின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள உதவுகின்றன என்றும், அந்தந்தக் கட்சிகளின் இலக்குகள் பற்றியும், தங்கள் நாட்டை முன்னெடுத்துச் செல்ல அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது என்றும் மூத்த அமைச்சர் டியோ கூறினார். சீனா பற்றிய மேம்பட்ட புரிந்துணர்வை சிங்கப்பூர் பெறுகிறது. இது ஆழமான இருதரப்பு ஒத்துழைப்புக்கு உதவுகிறது என்றும் திரு டியோ குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் தலைவர்களும் சீனா-சிங்கப்பூர் உறவுகளை, உயர் தரத்திலான, அனைத்தையும் உள்ளடக்கிய, எதிர்காலம் சார்ந்த பங்காளித்துவதற்கு உயர்த்தியுள்ளனர். புதிய சகாப்தத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பெருந்திட்டத்தை உருவாக்கினர் என்று திரு சென் குறிப்பிட்டார். இருதரப்பும் ஆளுமை, தலைமைப் பயிற்சி குறித்த பரிமாற்றங்களையும் பரஸ்பர கற்றலையும் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், சீனா-சிங்கப்பூர் உறவுகளில் புதிய முன்னேற்றத்திற்கு ஊக்கமாக அமையும் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.
திரு டியோ, மார்ச் 17ஆம் தேதி முதல் சீனாவுக்கு ஆறு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார்.