அந்தந்த காலகட்டத்துக்கான நிலவரத்தைக் கருத்தில்கொண்ட பிறகு இவ்வாண்டு முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 0.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
இந்த வளர்ச்சி விகிதம், ஓராண்டு காலத்தில் காலாண்டு அடிப்படையில் பதிவான ஆகக் குறைவானதாகும். உற்பத்தித் துறை மெதுவடைந்தது அதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வருங்காலத்தில் பொருளியல் வலுவடையும் என்பது பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.
சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்த விகிதம் 1.2 விழுக்காடாகப் பதிவானது. அதற்குப் பிறகு இவ்வாண்டு முதல் காலாண்டில் விகிதம் 0.1 விழுக்காட்டுக்கு சரிந்தது.
வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட கணிப்புகளில் இத்தககல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆண்டு அடிப்படையில் பொருளியல் இவ்வாண்டு முதல் காலாண்டில் 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இந்த விகிதம், சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் பதிவான 2.2 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.
எனினும், முதல் காலாண்டில் மூன்று விழுக்காடு பொருளியல் வளர்ச்சி இடம்பெறும் என்று என புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் முன்னுரைக்கப்பட்டது. அதைக் காட்டிலும் பதிவான வளர்ச்சி விகிதம் குறைவாகும்.
சராசரியான பொருளியல் நிலவரத்தைக் கொண்டு அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
சேவைத் துறைகளில் ஒட்டுமொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், போக்குவரத்து, பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் (ஸ்டாரேஜ்) ஆகியவை மொத்தமாக ஆண்டு அடிப்படையில் முதல் காலாண்டில் 2.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தன. முந்தைய காலாண்டில் இந்த விகிதம் 1 ஒரு விழுக்காடாகப் பதிவானது.
தகவல் தொடர்பு, நிதி, காப்புறுதி, நிபுணத்துவச் சேவைகள் ஆகியவற்றைக் கொண்ட துறைகள் ஆண்டு அடிப்படையில் 4.2 விழுக்காடு வளர்ச்சிகண்டன. முந்தைய காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் இத்துறைகளின் வளர்ச்சி 0.6 விழுக்காடு அதிகமாகும்.
தகவல் தொடர்பு மற்றும் மின்னிலக்கத் தீர்வுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதே தகவல் தொடர்புத் துறை வளர்ச்சியடைந்ததற்கான காரணம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு குறிப்பிட்டது.
எனினும், உற்பத்தித் துறையில் வளர்ச்சி 0.8 விழுக்காட்டுக்குக் குறைந்தது, முந்தைய காலாண்டில் வளர்ச்சி விகிதம் 1.4 விழுக்காடாகப் பதிவானது.