துபாய்: பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியுற்றதை அடுத்து, இந்திய அணி உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியுள்ளது.
‘சூப்பர் 12’ சுற்றில் இன்னும் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி, அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைவதற்கான சாத்தியம் குறித்துப் பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் (நவம்பர் 3), ஸ்காட்லாந்து (நவம்பர் 5), நமீபியா (நவம்பர் 8) ஆகிய மூன்று அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும் இந்தியா வெல்ல வேண்டும்.
நிகர ஓட்ட விகிதத்தில் மோசமாக இருப்பதால், அப்போட்டிகளில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் அல்லது குறைந்த பந்துகளில் இலக்கை எட்டி, இந்திய அணி வெற்றிபெறுவது அவசியம்.
இவையெல்லாம் நடந்தாலும், மற்ற போட்டிகளின் முடிவுகளும் அதற்குச் சாதகமாக அமைய வேண்டும்.
நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும். அப்போதுதான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் ஆறு புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அத்தகைய சூழலில், ஓட்ட விகிதத்தில் முன்னிலை பெறும் அணி, அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
இப்படியெல்லாம் நடந்தால் இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.
ஆனாலும், கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் நியூசிலாந்து அணி தோற்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
அப்படி நடந்து, அவ்வணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் நான்கு புள்ளிகளுடன் இருக்கும். அதுபோல, ஆப்கானிஸ்தானும் எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் தோற்கும் பட்சத்தில் அவ்வணியும் நான்கு புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
இவையெல்லாம் நடந்து, இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ஆறு புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழையலாம்.