சென்னை: பிரதமர் நரேந்திரமோடி -சீன அதிபர் ஸி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மகாபலிபுரத்தின் புராதன சின்னங்களையும் இரு தலைவர்களும் கண்டுகளிக்கவுள்ளனர். இந்திய, சீன தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன.
பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் ஆகியன குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் 2ஆம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலிஸ் அதிகாரிகளுடன் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தனர்.
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்துள்ளனர். கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். இதனால், உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது.