பாட்னா: இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைப் படம்பிடித்த கல்லூரி மாணவர்மீது குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்தார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இச்சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்தது.
பாகல்பூரைச் சேர்ந்த ஆஷிஷ் குமார் என்ற அம்மாணவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.எட். படித்து வந்தார்.
தங்கள் வீட்டிற்கு முன்பாக இருதரப்பு உள்ளூர் அரசியல்வாதிகள் மோதிக்கொண்டதாக ஆஷிஷின் சகோதரர் சச்சின் கூறினார். இதனையடுத்து, சகோதரர்கள் இருவரும் மொட்டை மாடிக்குச் சென்று, நடப்பதைக் கண்டனர்.
அப்போது, எவரோ துப்பாக்கி விசையை அழுத்த, அதிலிருந்து பாய்ந்த குண்டு ஆஷிஷின் நெஞ்சைத் துளைத்தது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த மொத்த நிகழ்வும் ஆஷிஷின் கைப்பேசியில் படமாகப் பதிவாகியுள்ளது.
ஆஷிஷின் மரணத்தைத் தொடர்ந்து, விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவருகிறது.